…ராணி………………………………..

சிறு,சிறு பற்றைக் காடுகள், ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வீதி குறுக்கு மறுக்காய் வீதி கடந்து
ஓடும் நரிகள், தம்மைப் பிடிக்க யாரோ வந்திருக்கிறார்கள் என்ற நினைப்பில் தொடர்ந்தோடிச்
சிலிர்க்கும் முயல்கள்…….. அந்த முயல்கள்… அவற்றின் பயம், ஓட்டம், குறண்டல், பதுங்கல்….
பாவம் அந்த முயல்கள்.
இருண்ட காட்டின் அமைதியைக் குலைத்த படி இரண்டு ஒளிக் கோடுகளை
ஏவிச் செல்லும் சிவப்பு வாகனமொன்றினுள் தலை மாற்றி இரண்டு விமானங்களிலேறி நாடுகளின்
எல்லைகளைக் கடந்த மூன்று மனிதர்கள் இருந்தனர். யாழ்ப்பாணமும், மன்னாரும், மட்டக்களப்பும்
கூட அந்த வாகனத்துள் மன முடிச்சுகளாய் இருந்தன. மூன்று மனிதர்கழுக்கும் ஆறு பெயர்கள் இருந்தன.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் தத்தமது இரவற் பெயர்களை
கைவிடாதவர்களாய் தமக்கே உரிய ரகசியங்களை தமது மன முடிச்சு களுக்குள் வைத்திருந்தனர்.
வாகனம் ஒரு வீட்டின் முன்னே நின்றபோது ‘தவசீலன் ‘எனப்படும் இளைஞன் மட்டும் இறக்கப்பட்டான்.
மிகுதி இருவருமே தத்தமது இரகசியங்களைச் சுமந்தபடியே கடந்து சென்றனர். கதவுஒருமுறை சட்டெனத்
திறந்தபோது வீடு அவனை விழுங்கிக் கொண்டது. கொஞ்சம் முதுகைப்பிடித்து அழுத்தினால்
முறிந்துவிடுவானோ என கருதக்கூடிய அவன் தனது பொதியைச் சுமந்தபடி வீட்டினுள் நின்றான்.
சாயம் போன உடைகளோடும் உற்சாகமற்ற முகபாவங்களோடும்
உள்ளேயும் சில தமிழ் முகங்கள். ‘தீபன்’ இவருக்கு உள்ளுக்க கூட்டிக்கொண்டுபோய் இடத்தக் காட்டு”
என்று வாசலில் இருந்த ஒருவன் சொல்ல சற்று பருமனான உடல் வாகைக் கொண்ட தீபன் வந்து
கூட்டிச் சென்றான். உள்ளே ஒன்றும் விசாலமான இடமில்லை. ஒரு விறாந்தை, அதனருகில் இரண்டு
மலகூடங்கள் அமைந்ததொரு ஓடை, ஓடையை ஒட்டி சமையலறை அதன் பின்புறமாய் இரண்டு அறைகள்,
அருகில் கூரை இல்லாததொரு சீமெந்துத் தரை. அவ்வளவும்தான் அந்த வீடு.
முழுதாக மூடப்படாத
முன்னறைக் கதவோரம் ஒரு பாதி முகம் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கடந்து அடுத்த
அறையில் நுளைந்தபோது. அங்கே நான்கு குதிரைகள் மாறி மாறிப் பாய்ந்துகொண்டிருந்தன, அறை முழுவதும்
ஒரு யுத்தகளமாய்க் கிடந்தது. இரண்டு அரசுகளின் சண்டை , அரசுகளைக் காப்பாற்ற அப்பாவி இளைஞர்களின்
மரணங்கள்……………….. தந்தரங்கள், ஏமாற்றங்கள், இறந்த காலத்தில் நகர்த்திய பிளையான காய்கள் கொடுக்கும்
துன்பியல்கள், ஓமோம் அங்கே மும்முரமாய் ‘செஸ்’ விளையாடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைக்
கண்டான். அவர்கள் வரவேற்பதில் பெரிய ஆர்வம் இல்லாதவர்களைப் போல தலைகளை நிமிர்த்தி இரண்டு
சிறிய புன்சிரிப்புகளோடு குனிந்து காய்களை அகற்றுவதற்கான சிந்தனைக்குள் மூழ்கினார்கள். ‘ செஸ்காய்கள்
செஸ்போட்டை விட்டு வெளியே நகருவதில்லை’ என்று தனக்குள் முணு முணுத்துக் கொண்டான். அந்த அறை
பெருமூச்சுகளால் நிறைந்து கிடப்பதையும் அவனால் உணரக் கூடியதாக இருந்தது. ஏற்கனவே வந்துபோன
பயணிகள் விட்டுச் சென்ற சுமைகளும் அவை ஒவ்வொன்றுக்குமான கதைகளும் அங்கே அடுக்கப்பட்டிருந்தன.
அந்த அடுக்கின் மேலே ஏறி அமர்ந்து கொண்டது ‘தவசீலனின் கதை”. ஆடை மாற்றி, தேனீர் பருகி அங்கே
இருந்த விவிலியத்தை புரட்டியபடி இருந்தவனிடம் தீபன்தான் கதை கொடுத்தான்.

நாட்டில அண்ணன் எந்த இடம்?
யாழ்ப்பாணம் கூத்தர் துற….
கூத்தர் துறையோ…. அங்க நான் வந்திருக்கிறனப்பா…..
ஆ…
அப்ப உங்களுக்கு மக்காட்டத் தெரியுமோ….?
ஓமோம் தூரத்துச் சொந்தம்தான்….
அப்ப உங்கழுக்கு………………………… தெரியுமோ?
ஒரே ஊர் என்றால் தெரியும் தானே…..
உங்கட ஊருக்கு நான் வந்ததே ரெண்டு பேர மண்டையில போடுறத்துக்குதான்.
ஒராள்……………… மற்றாள்……………………….ஆக்களிப்ப எங்க இருக்கிறாங்கள்?
நான் ஊரைவிட்டு வெளியேறி கனகாலம் தானே……………

இந்தத் தொடக்கமே தவசீலனுக்கு ஒத்துவராததாய் இருந்திருக்கவேண்டும். அவனோடு கொஞ்சம் அளவாகவே
கதைக்கவேண்டுமென்று நினைத்தான். தீபனின் விசாரணைகளுக்கு பட்டும் படாமலும் பதில்களைச் சொல்லிக்
கொண்டிருந்தான். பின்னர் நித்திரை வருவதாகச் சொல்லி கதையின் சூட்டைத் தணித்துப் படுத்தான். தீபன் போனதும்
அறைக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கழும் விளையாட்டை முடித்து இவன் பக்கம் திரும்பினார்கள்.
‘சொறியண்ணே நீங்க அவனோட கதச்சுக் கொண்டிருந்ததால நாங்க பேசாம இருந்திட்டோம்’ என்றான் முப்பத்திநான்கென
வயசுமதிக்கத் தக்க சிவா. மற்றவன் இருபத்தி நான்குவயது சுதன். சிவா அய்ந்து வருடமாகவும், சுதன்
இரண்டு மாதமாகவும், அவர்கள் வருவதற்கு முன்னரே தீபன் அங்கே இருப்பதாகவும் அறிந்து கொண்டபோது புதிதாய்
வந்த தவசீலனுக்கு இடி விழுந்தது. கொஞ்ச நேரம் கதைத்தார்கள் பிறகு அவர்கழுக்கே உரிய கதைகளோடு
படுத்தார்கள். அவர்கள் படுத்தபோது கதைகள் பேன்களைப் போல ஊரத் தொடங்கின.

கூத்தர்துறையில்’ மக்காட்” என்று அழைக்கப்படும் ஒருவன் இருந்தான். அவனொரு தேர்ச்சி பெற்ற
படகோட்டியாய் இருந்தான். துருதுருவென பண்டிக் கீளி மீனைப் போலவே அவனது செயல்கள் இருக்கும்.
மக்காட் யாருடனும் மிக இலகுவாக பளக்கம் பிடித்து விடுவான். முதல்நாள் ஒருவருடன் பளகி மறு நாள்
மச்சான் என்று தோழில் கை போட்டு விடுவான். அதனை அவன் நட்பு என நம்பினான். எப்போதுமே அவனது
நுனி நாக்கில் வார்த்தைகள் இருந்தன.

இரவில் கடலைக் கடந்து போகும் இயக்கக் காரர்கள் அவனை வந்து இரகசியமாய் கூட்டிச் செல்வது
வளக்கமாய் இருந்தது. அது இரகசியமாய் நடக்கும் வேலை என்று இயக்கக் காரர்கழும் நம்பினார்கள்.
மக்காட்டைக் கூட்டிச் செல்லும் நாட்களில் அவனது மனைவி வீட்டில் படுப்பது இல்லை. அவள் பிள்ளைகளையும்
காவிக்கொண்டு அவளது தாயின் வீட்டில்போய் படுத்து விடுவாள். ‘இயக்கம் வந்து கடலால போகுதாம்’ என்ற
செய்தி இரவோடு இரவாக பரவத் தொடங்கிவிடும். மக்காட்டின் மாமியார் வீட்டில் ‘பீ பீ சீ செய்தி”
கேட்பதற்காகக் கூடும் கூட்டம் விடிந்ததும் மக்காட்டைச் சந்திக்கக் காத்திருக்கையில் மக்காட்டு ‘கெப்பேறு” வந்தவனாய்
நடந்துகொண்டிருப்பான். சில வேளைகளில் வீட்டுக் கூரையின் மேலே ஏறி நின்று நெற்றியின் மேலே
கையை வைத்து கடலை அவன் பார்க்கும்போது. அவனையே அவதானித்தபடி இருக்கும் கிழவர்கள் கூட்டம் ‘ டேய்… மக்காட்…
கடலப் பாக்கிறானெடா… நேவி, கீவி வாறானோ தெரியேல்ல” என்று குசு குசுக்கத் தொடங்கி விடுவார்கள்.
ஒரு முறை கூரையின் மேலே ஏறி நின்றவன் கடலில் தூரத்தில் தெரிந்த பிழையான கறுப்பைக் கண்டு
‘ ஓ மக் காட் “ என்று சொல்லிய போது ஆங்கிலம் தெரிந்த ஒரு கிழவன் சூட்டிய நாமம்தான் ‘மக்காட்”

ஆனால் கூரைக்கு மேலே படம் காட்டும் பல மனிதர்களின் வீட்டு அறைகளில் வாழ்க்கை விசித்திரமானதாகவே
அமைந்து விடுகிறது. உண்மையான இயக்கக்காரர்களை இனம் காண முடியாத ராணுவம் மக்காட்டைத் தேடவே
அவன் ஊரை விட்டு ஒளிந்தோடித் திரிந்தான். அவனது குடும்பம் அவன் இல்லாத காலத்தில் மிகுந்த
வறுமைக்குள் உளன்றது.
தீபனும் மக்காட் வீட்டுக்கு வந்திருக்கிறான் என்று ஊகித்தபடி படுத்திருந்தான் தவசீலன்.
புதிதாய் வந்த இரண்டு பேரும் நித்திரைக்குள் புதைந்து கிடக்க சிவா மட்டும் எழுந்து குந்தினான். சிறிது நேரம்
சுவரையே பார்த்தபடி இருந்தான். ஒவ்வொரு காலையிலும் அவன் முழிக்கின்ற சுவர் அது, அவனது வாழ்க்கையின்
முன்னே எழுந்து நிற்கும் பெருஞ் சுவரின் சிறிய படிமம். அவன் படுக்கையிலிருந்து எழுந்து கூரையற்ற சீமெந்துத்
தரைக்குப் போனான். போகும்போது பக்கத்து அறையை நோட்டம் விட்டவாறே நடந்தான். அறைக்குள் எந்த அரவமும்
இல்லை. அனேகமாக அவளும் நித்திரை கொண்டிருக்க வேண்டும். சீமெந்துத் தரையில் இருந்தவாறே வானத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மின்மினியைப் போல விமானமொன்று பறந்து கொண்டிருந்தது. அவன்
பெருமூச்சொன்று விட்டான் அம்மா…. என்று முனகினான். துயரம் வரும்போது அம்மா என்கின்ற சொல்லில்தான்
எத்தனை ஆறுதல் கிடைக்கிறது.
அவனது மனக்கண்ணில் மிழகாய்த் தோட்டத்தில் கிளி கலைத்துக் கொண்டிருக்கும்
தாயின் உருவம் தோன்றி இறந்த காலத்தின் நினைவுகளை நகர்த்திக் கொண்டிருந்தது. தோட்டம் விடியும்போது
எழுந்து புதிதாய் வெண்படை போர்த்தி இருக்கும் புடலங்காய்களைத் தடவிப் பார்ப்பதும், தக்காளிச் செடிகளின்
ஸ்பரிசத்தோடு அவற்றிலுருந்து வெளிவரும் வாசத்தை நாசியில் இழுத்துக் கொள்வதிலும்தான் எத்தனை இன்பம்…
அம்மா இப்போதும் கிளிகளை துரத்துகிறவளாகவே இருக்கிறாள். கிளிகள் போட்ட சாபம்தான் நான்இப்படி நாடு நாடாய்
அலைவதற்குக் காரணமோ என்று அவன் நினைத்துக் கொண்டான். எத்தனை விமான நிலையங்கள், சிறைச் சாலைகள்,
காடுகள்,விபசார விடுதிகள், இந்த வாழ்க்கைக்குள்தான் எத்தனை வளைவுகள்…….

அவனது தனித்துவம் மறுக்கப் பட்டபோதெல்லாம் அவனிருந்த இடங்களில் தன் காமத்துக்கான வடிகாலைத் தேடி
கடப்பவனாகவே இருந்தான். ஆனால் இங்கே……. சுவர்கள், கதவுகள்……………… அவளது அறையின் முன்னால் கால்களை
‘சீய்த்துக் கொண்டு” நடந்தான். பின்னர் அறைக்குள் வந்தபோது தீபன் முழித்திருக்கிறான் என்பது தெரிந்தது.
இந்தத் தீபன் எத்தனை மணிக்குத்தான் நித்திரை கொள்கிறான்…. பார்க்கிற நேரமெல்லாம் முழிப்பாக இருக்கிறானே..
என்று சினந்தவாறே படுத்தான்.
திகதி மறந்துபோன அந்த மறுநாள் விடிந்தபோதும் சிவா படுத்திருந்தான்.
சுதன் படுக்கையை சுருட்டியபோது தவசீலனும் எழுந்து கொண்டான். குசினிக்குள் வந்தபோது தனக்கான தேநீரை
கலக்கிக் கொண்டு அறைக்குள் போய்க்கொண்டிருந்தாள் ‘ராணி”. ‘அண்ணே தேத்தண்ணி குடியுங்க’ என்று ஒரு
குவளையை நீட்டினான் தீபன், தனக்கான தேனீரை எடுத்துக்கொண்டான் சுதன்.

ராணி அறைக்குள்ளேயே பெரும்பாலான நேரம் இருந்தாள், பின்னர் எழுந்து முன் விறாந்தைக்குப் போய் தீபனிடம்
ஏதையோ சொன்னாள் அவன் தலையை ஆட்டிவிட்டு ‘சேட்” ஒன்றைப் போட்டுக்கொண்டு கடைக்குப் போய் வருவதாகச்
சொல்லிச் சென்றான். அவள் திரும்பவும் வந்து அறைக்குள் இருந்தாள். உடம்பு மிகுந்த பெலவீனமாக இருந்தது. தனியொரு
பெண்ணாய் அந்த அறைக்குள்ளேயே எவ்வளவு காலம் அடைந்து கிடப்பது…..அவளோடு வந்து கனடாவுக்கு அனுப்பப் பட்ட
அவளது அண்ணன் பயண வழியில் பனிக்கட்டிக்குள் புதைந்து செத்தான் என்பதும், அவளது கிராமத்தில் நடந்த விமானத்
தாக்குதலில் அவளைப் பெற்றோர் சிதறிப் போயினர் என்பதையும் அறிந்திராத அவள் ஒருநாள் தனது குடும்பத்துடன்
கனடாவில் வாழ்வதாகக் கற்பனை செய்துகொண்டாள். அவழுக்குத் துணையாக அவளது கற்பனை மட்டுமே
அந்த அறைக்குள் வாழ்ந்து வந்தது.
அவழும் இரண்டு முறை அங்கிருந்து புறப்பட்டு இரண்டு முறையும் பிடிபட்டதால்
பயணமே கேள்விக்குறியாகிப் போனது. தனது இறுகிப்போன வாழ்க்கையின் பின்னால் இருக்கும் கோரமான அரசியலின்
முகத்தையும், தன் கையிலில்லாத தனது நிகழ்கால வாழ்க்கையின் நிலையையும் எண்ணி அவள் வருந்தினாள்.
அவழுக்குப் பின்னே பலர் வந்து போய் விட்டனர். அங்கே வந்து போன ஆண்கள் பலரது கண்கள் வயது வித்தியாசம் பாராமலே
அவளின் மேலே மேய முயலும் போதெல்லாம் அவழுக்கு மிகுந்த கோபம் வரும் அவள் கோபங்களை அடக்கி அடக்கியே
தன் மனதை காயப் படுத்திக் கொண்டாள் ஆண் இனத்தின் மீதே அவழுக்கு அருவருப்பு வந்தது. அவளது மனது அவளுக்
குள்ளேயே பல எச்சரிக்கைக் கோடுகளை ஏற்படுத்திக் கொண்டு ஆழமாகிக் கொண்டிருந்தது. ஆழமான பழ்ழமொன்றிலிருந்து
வரும் நசிபட்ட குரலாய் தனது குரலை அவளே உணர்ந்தாள். ஆயினும் தனது மனசுக்குக் கட்டுப்படாத உடலோடு
அவளுக்குள் ஒரு போராட்டம் நிகழ்ந்துகொண்டே இருந்தது.

ராணியின் கதையை சுதனிடமிருந்து கேட்டறிந்தான் புதிதாய் வந்த தவசீலன். அவன் அவளுக்கு ஆதரவாக
இருக்கவேண்டுமென நினைத்தான். ஆண்கள் எல்லோருமே அப்படி இல்லை என்பதை அவளுக்குச் சொல்ல தான் எந்த
அளவிற்குத் தகுதியானவன் என்பதை அவன் யோசித்தான். அவன் எந்த அளவிற்கு மரியாதையாக பெண்களோடு
நடந்து கொள்ள முயன்றாலும் பாளாய்ப் போன கண்கள் சொல்வளி கேட்பதாக இல்லையே என்று முண்முணுத்தான்.
காமம் நல்லதுதான்…. அது அழகானதும் கூட.. காமத்தின் மீது வக்கிரம் விழுந்துவிடாமல் பார்க்கவேண்டும் என
ஒரு வகையாக முடிவெடுத்தான். அவனது சுய இன்ப முயற்சியில் எந்தப் பெண்ணின் உருவத்தையும் அவளது
அனுமதியின்றி நினைப்பதில்லையென முடிவெடுத்தான். அவ்வாறாய் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. மலகூடத்தில்
ஆழுக்கொரு சுய இன்பம் தாறுமாறாய் நிகழ்ந்து கொண்டிருந்தது.

பெரும்பாலும் ஆண்களது அறையினுள் பெண்கள் பற்றிய கதைகளே நிறைந்திருக்கும். கொழும்பு பயணிகள்
விடுதியொன்றில் தனக்குப் பளக்கமான அக்காமார்பற்றிய கதைகளை சொல்லிக் கொண்டிருப்பான் சுதன்.
பெண்களை நெருங்குவதற்கு உகந்த ஆயுதமாக ‘ அக்கா” என்ற சொல்லை அவன் பாவிப்பதில் கெட்டிக் காரனாக
இருந்தான். வார்த்தைகளுக்குள் பதுங்கியிருக்கும் பூனையைப் போல அவன் நடந்து கொண்டபொழுதுகளை வாயூற
விபரித்துக் கொண்டே இருப்பான். அவன் ராணியையும் ‘ அக்கா” என்றே அழைத்தான். சுதனின் கபடத் தனங்களை
அவன் வாயாலேயே அறிந்த தவசீலன் ராணியை எச்சரிக்க நினைத்தும் அவள் என்ன நினைக்கிறாளோ என்று யோசித்தான்.
அவளுக்கும் சுய அறிவு இருக்கிறதுதானே என்று அதுபற்றிக் கதைப்பதை தவிர்த்தான். பின்தள்ளிப் போய்க்கொண்டிருக்கும்
தனது பயணநாளை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளானான், அந்த வீட்டின் ‘மாபிள்’ தரையில் கால்களைக் கெந்தி
அவற்றை எண்ணித்திரிந்தான், அந்த வீடு அவனுக்கு ஒருபெரிய ‘செஸ் போட்” ஆகத் தெரிந்தது

இவ்வாறாக காலம் கரைந்து கொண்டிருந்தது. இரவுகளில் ராணியின் அறைமுன்னால் சிவா கால்களை சீய்த்துக் கொண்டு
நடந்தான், ராணி தம்பியை நம்பினாள், தவசீலனிடம் கடனாக வாங்கிய நூறு டொலர்களை தர
முடியாது என்று சொல்லிய தீபனிடம் சண்டைபோட நாதியில்லாதவனாய்
தவசீலனும் தனது பயணத்தைத் தொடங்கினான்.
சில ஆண்டுகளின் பின்னர்
சிவா, தவசீலன், சுதன் என்ற அந்த மூன்று இளைஞர்கழும் ‘ பரிஸில்’ உள்ள தேனீர்ச் சாலையொன்றில் சந்தித்தனர். சுதன்
தான் சொன்னான் ‘ தவசீலன் அண்ணே உங்கழுக்கு ஒரு விசயம் தெரியுமே..
சிவாண்ணே அந்தப் பொட்டைக்கு……. குடுத்து விட்டிட்டேர் என்ன………

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)