அலாரக் கதவு

என் அருமையான வாசகரே /
யாரோ என்னைக் கூட்டிச் சென்றார்கள். அவர்கள் யாரோ வீட்டில் விட்டார்கள்.
நான் யாரென்ற புற அடையாளத்திற்குத் தொலைவில் நின்றபோது ‘நீங்கள் யார்” என்று யாரோ கேட்டார்கள். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றேன் நான். அந்த ஒற்றைச் சாளர அறையில் என்னை தனியே விட்டு
அவர்கள் மறைந்து போனார்கள். மறைவதற்கு முன்னர் ‘பிடிபட்டு விடாதே’
என்று சொல்லிச் சென்றார்கள்……………………………………………….
மனதின் சூக்குமமான வேர் துயரச் சுனையில் விழுந்துவிட்டாற்போல்…… அறிவுக் கண் அடைத்துக்கொண்டிருக்கும் இந்த மந்தாரமான வெளியில் ‘சாளரக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு நான் தனியனில்லையெனும் மனநிலையைத் தோற்றுவிக்கும் பாசாங்கு மிகுந்த முயற்சியில் இறங்கியிருக்கும் நான் என்னைமுந்திக் கடந்துவந்த சொற்களைக் கூட்டியள்ளி
உங்களோடு பேச முயல்கிறேன்……………………………………..

என் தலைமாட்டில் சவக்காலை யொன்று திறந்து கிடப்பதையும், செழும்பு பிடித்த பிணைச்சல்களோடு அதன் பழமையான கதவுகள் ஒரு அலாரத்தைப் போல கிறீச்சிட்டுக் கொண்டிருப்பதையும் உங்களுக்குச் சொல்லவேண்டும். சவக்காலையின் அலாரம் கணிக்கமுடியாததொரு காலத்தில் இரைந்து கொண்டிருப்பதையும், தலைமாட்டில் சவக்காலையை வைத்துக் கொண்டு உறங்கும் அனுபவத்தையும் உங்களுக்கு உணர்த்தவேண்டும்…………………………………….

நேற்றுக் காலையும் ஒரு மனிசியின் உடலைக் கொண்டுவந்து புதைத்தார்கள்,
புதைக்கும் முன்னர் குழியில் வைத்து கடைசியாய் திறந்து பார்த்தார்கள். சீவன் போனதன் பின்னர் அர்த்தம் குறைந்த அடயாளமாய்க் கிடந்த அந்த முகத்தைப் பார்த்துக் கண்ணீர் சொரிந்தார்கள். பின்னர் கண்ணீரையும் சேர்த்து மண்ணால் மூடிவிட்டுப் போனார்கள். அந்த மனிசியோடு கலவிகொண்டவனின் கண்ணீரின் சாரத்தை நான் கூர்ந்து அவதானிப்பவனாய் இருந்தேன். அவன் விம்மி, விம்மி அழுதபோது அவனது நினைவுப் பரப்பில் கசிந்தபடி வெளிவந்துகொண்டிருந்தது கண்ணீர்.
மூடிய குழியின் மேலே பூச் செண்டுகளை வைத்தார்கள் அந்தப் பூக்களின் வாசம் காற்றில் பரவி என் சாளரத்துக்கு வந்தபோது அதில் பிணவாடையும் கலந்திருப்பதை நான் உணர்ந்தேன். மண்ணால் மூடிக்கிடந்த அந்த மனிசியின் நித்திரையை யோசித்தபடியே நான் நித்திரையாகிப் போனேன். அந்த மனிசியும் உடல் மைத்தாலும் பறவாயில்லை யென்று நித்திரையாகிக் கிடந்தாள். அவளது உடல் மைத்திருக்கும் என்று நான் கருதிய ஒரு காலத்தில் அவன் மீண்டும் வந்தான் கொஞ்சக் கண்ணீரை கல்லறையில் உதிர்த்தான், பின்னர் பூச்செண்டுகளை அங்கே நட்டபடி நினைவுப் பரப்பில் நகர்ந்தான். அவள் உடல் மைத்த பின்னும் மனங்களுக்குள்
நடந்துகொண்டிருந்தது கலவி.
நான் அவனோடு பேச ஆசைப் பட்டேன் அவன்
சவக்காலைக் கதவுகள் கிறீச்சிட வெளியே வந்தான். நான் எதிர் பாராத கணத்தில் என் சாளரத்தைப் பார்த்தான் அதனூடு என் வெளிறிய முகத்தை
குறுகுறுவெனப் பார்த்துவிட்டு நடக்கத்தொடங்கினான்.. நான் வீட்டிலிருந்து
இறங்கி அவனிடம் போவதற்குள் ஏதோவொரு குறுக்கு வீதியில் நுளைந்து
மறைந்து போனான்.
00
சவக்காலையிலிருந்த அழகிய பூச்செடியொன்றை என் அறையிலும் வளர்த்துவந்தேன் . ஒரு நாள் எனது அறைக் கதவை எதிர்பாராத விதமாக வந்து அவன் தட்டினான். நான் கதவைத் திறந்தபோது ஒரு பயித்தியக் காரனைப் போல காட்சியளித்த அவன் எனது அனுமதியின்றியே என் அறைக்குள் வந்து குந்தினான், சிரித்தபடியே கேட்டான் ‘துயரம் அழகானதா’ …… என்று. அன்பு அழகானது அதன் அடியில் ஊடுபாவி இருப்பதால் துயரமும் அழகானது என்றேன். வாய்க்குள் சிரித்தபடியே அதே குறுகுறு பார்வையைப் பார்த்துவிட்டு ‘முள்ளுக் கம்பிகளை அறுக்கும் ஆயுதங்களேதும் உன்னெட்ட இருக்கோ’ என்று கேட்டான் பின்னர் ‘இந்தப் பூச்செடியை நான் கொண்டுபோறன்” என்றபடி எனது அறையிலுள்ள பூச்செடியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.. அவன் அதைக் கொண்டுபோய் மீண்டும் அந்தச் சவக்காலையில் நட்டுவைத்தான் பின்னர் வெளியேறி நடக்கத் தொடங்கினான்.அவனுக்குத் தெரியாமலே நான் அவனைப் பின்தொடர்ந்தபடி இருந்தேன்.
கிராமத்தின் ஓர் ஒதுக்குப் புறமான இடத்திலிருந்தது
அவனது வீடு.ஓர் பெருவீதியிலிருந்து கிளைபிரிந்த ஒற்றையடிப் பாதையின்
வழி அவனைப் பின்தொடர்ந்தபோது அவன் எனைக் கண்டுகொண்டான்.
‘என் பின்னே எதற்கு வருகிறாய்’ என்று எனைக் கேட்டான். காலத்தில் சுருங்கி
விரியும் என் நிழலைப் பற்றி யோசிப்பதற்காக என்றேன் அவனிடம். ஆமாம்
மேடுகளிலும்,பழ்ழங்களிலும் நெழிந்து பயணிக்கும் உனது நிழல் ஒளிபடாத
உன் பக்கமொன்றிலிருந்து தோன்றுவதை அவதானிக்கிறாயா? என்றுகேட்டான்
நானும் தலையசைத்துக் கொண்டேன். ‘சரி சரி என்வீடு பக்கத்தில்தான் இருக்கிறது வந்துவிட்டுச் செல் என்றான்.
அவன் வீட்டில் தேனீர் அருந்தியபடி
இருக்கும்போது ‘நீ யாருடைய சாயல்’ என்று கேட்டான் எனக்கோ பதில்
தெரியவில்லை அவன் சிரித்தபடி உனது சாயலில் எனக்கோர் நண்பனைத்
தெரியும் என்று தன் நண்பன் பற்றிய கதையொன்றைச் சொல்லத் தொடங்கினான்.

கதை
……………….

வாழ்க்கையை துடுக்குத் தனமாக அணுகிய காலமொன்றில் எனக்கொரு
நண்பன் இருந்தான். என்னைப்போலவே பலவற்றைத் தொலைத்துவிட்டு
இடம் பெயர்ந்தோர் முகாமொன்றில் என்ன தொழில் செய்யலாமென்று
யோசித்துக் கொண்டிருந்தான். அவனது கையில் கூப்பன் கடையில் உடைத்துக்
களவாடிய பலகைத் துண்டொன்று இருந்தது, முகாம் கொட்டில்கள் போடுவதற்கு வெட்டிய தடியொன்றினை எடுத்து ஒரு மரச்சுத்தியல்
செய்துகொண்டான். கொட்டில்களுக்கு குந்துவைக்கும் தொழிலாழியென்று
தன்னை ஆக்கிக்கொண்டான்.
பின்னர் ஓரிடத்திற்கு இடம்பெயர்ந்தபோதும்
அவனிடம் தொழில் இருந்தது. கடலை அண்டிய அந்தப் பிரதேசத்தில்
கடலட்டைகள் எடுத்து கொழும்புக்கு அனுப்பக்கூடிய சூழல் இருந்தது
ஆனால் சுழியோடும் பாதணிமட்டும் கொழும்பிலிருந்து கொண்டுவருவதற்கு
தடையிருந்தது தொழிலாழிகளோ தோசைச்சட்டியில் ஓட்டைகளிட்டு
சைக்கிள் ‘ரியூப்’ துண்டால் கட்டிக்கொண்டு சுழியோடினார்கள். அந்தவேளை
நம்மாள் தனது வித்தையைக் காட்டத் தொடங்கினான்… ‘பிளாஸ்ரிக்” பீப்பாய்களை சிறகுபோல வெட்டி பந்து தைக்கும் ஊசியொன்றின் உதவியோடு ‘மோட்டார் சைக்கிள் ரியூப்’ துண்டுகளை மேலே பொருத்தி சுழியோடிகளின்
பாதணி 300 ரூபாயென விற்றான். இடங்கள் பெயரப் பெயர அவனது
தொழில்களும் மாறிக்கொண்டிருந்தன. அவன் வேறிடமும், நான்வேறிடமுமாய்
பெயர்ந்துபோனோம்.
சமாதான காலமொன்றில் மீண்டும் ஊர்திரும்பியபோது
மனிதர்கள் வித்தியாசமாக இருந்தார்கள். வன்னியில் இருந்து வந்தவர்களுக்கும், கொழும்பிலிருந்து வந்தவர்களுக்கும், யாழ்ப்பாணத்தில்
இருந்தவர்களுக்கும் வித்தியாசம் இருந்தது. ஒட்டாத மூன்று குழுக்களாய்
அவர்கள் இருந்தார்கள். அவர்களின் கதைகளும்,நடவடிக்கைகளும் வித்தியாசமாக இருந்தன. கொழும்பிலிருந்து வந்த பெண்கள் கல்லுவீதிகளில்
குதிகால் உயர்ந்த பாதணிகளோடு நொடுக்குநொடுக்கென்று அந்தரப் பட்டு
நடந்தார்கள், வன்னியிலிருந்து வந்தவர்கள் போர்த்து மூடிக்கொண்டு திரிந்தார்கள், யாழ்ப்பாணத்திலிருந்தவர்களோ ஏதோ மாய முடிச்சுகளை
சோட்டித் துண்டுகளில் முடிந்து திரிந்தார்கள்.
பலரது வீடுகளில் தலை கீழான திறப்போட்டைகள் இருந்தன, தீராந்திகளால் மூத்திரக் கொல்லைகள் அடைக்கப்
பட்டிருந்தன…. பலவீடுகளின் சிதறிய துண்டுகள் பொருந்திய ஒற்றைவீடுகள்
நிறைந்திருந்தன.
நண்பன் அயலூரில்தான் இருந்தான். நான் வந்திருப்பது தெரிந்தும் அதை அவன் பெரிதுபடுத்தவில்லை. அவனைக்காண நான்முயற்சித்தபோதும் அவன் எனக்கு ஒழித்துத் திரிபவனாகவே இருந்தான். ஒருநாள் அவனது நெற்றிக்கு முன்னே நான் நின்றபோது எதுவும் செய்யமுடியாதவனாய் விம்மி,விம்மி அழத் தொடங்கினான்.
நண்பன் மிகவும் மென்மையானவன். நடப்பதுகூட
பெண்களை ஒத்திருக்கும், சாரத்தின் உள்ளே எப்போதுமே காற்சட்டை போட்டு
இறுக்கி முடிந்திருப்பான், அரியல் சாரத்தால் யாரும் எதையும் கண்டுவிடக் கூடாதென்ற அவதானம் அவனிடம் இருந்தது. எப்போது பார்த்தாலும் அவனது ஓரல் முகத்தில்சிரிப்பும் இருந்தது. ஆயினும் அவன்பேரில் ஒரு திருட்டுக் குற்றமும்,கொலைக் குற்றமும் இருந்தது, அந்தக்கொலைக் குற்றவாளி நிற்சயமாக அவனில்லையென்பது எனக்குத் தெரியும். ஆதலால் அந்தக் கொலையைச் சுற்றியிருந்த மாயங்களோடே அவனது நட்பை ஏற்றுக் கொண்டேன்.ஆனால் ஒருநாள் பனங்கூடல் வழியாக வேலைக்குச் சென்றுவந்த
அவனது மனைவி வீதியின் அருகில் பெரியவாகனச் சில்லுப் பள்ளமொன்றில் தேங்கிக் கிடந்த மழைநீரில் அமுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். மூன்றுமாதக் கருவைச் சுமந்த அவளது உடல்முழுதும் சேறாயிருந்தது.
கொலையாளியோடு போராடியிருக்கிறாள் என்பது அவளது கோலத்தில் தெரிந்தது. பனையிலிருந்து நோட்டம் விட்டுக்கொண்டிருந்த கொலையாளி
மிகுந்த பிரயாசைப்பட்டு இக்கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்றிருக் கிறான் என்று சனங்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால் கண்டுபிடிக்கப்படாத
கொலையாளிகளால் அந்தச் சூழல் நிரம்பிக் கிடந்தது என்பதுமட்டும் அப்போது
உணரக் கூடியதாக இருந்தது. ‘கொலைகளை நியாயப் படுத்துபவர்களைவிட
கொலைகளை இரகசியப் படுத்துபவர்கள் கெட்டிக்காரர்கள் போலும்’ என்று
நினைத்துக் கொண்டேன்.
சேற்றில் மூழ்கடிக்கப்பட்ட அவன் மனைவியின் முகம் அவனது கனவுகளில் வந்து அழுதுவிட்டுப் போனபடியிருந்தது.
பின்னர் பிரச்சினை தொடங்கியபோது அவன் வன்னிக்கு இடம் பெயர்ந்ததாகவும்,துணைப் படையில் இணைந்து கொண்டதாகவும் அறிந்தேன்
என்றான்/
அவனது நண்பனின் கதை தந்த சுமையோடே எழுந்து நடக்கத்
தொடங்கினேன்……………….

அந்தத் தெருவில் அப்போது வியாகுலம் நிறைந்ததொரு காட்சியைக் கண்டேன்
செழுமையான பச்சைப் புற்தரையிலிருந்து தார் வீதியில் விழுந்த புழுவொன்று
வெய்யிலில் அவதியுற்றபடி கிடந்ததைக் கண்டேன். நான் அதை காப்பாற்ற நினைந்து ஒரு சிறிய ஈக்கிற் குச்சியை அதனருகில் கொண்டுபோனேன்
புழு அதன் மேலே ஏறினால் அந்த புற்தரையில் அதனை கொண்டு சேர்க்கலாம் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ஆனால் அந்த ஈக்கிற் குச்சி அருகிற் சென்றதும் புழுவோ அதன் தலையிலிருந்து ஓர் குமிழியை வெளியேற்றி விட்டு சுருண்டு கொண்டது புழுவுக்கு என்மீது நம்பிக்கை யில்லை, அதற்கு அந்த வேளையில் என்ன தேவையென்பதைப் புரிந்து கொள்ளவும் என்னால் முடியவில்லை மிகுந்த தோல்வியும்,துயரமும் என்னை ஆட்கொண்டது சற்று நான் தலையைச் சாய்த்து நீண்டுகிடந்த அந்தத் தெருவைப் பார்த்தபோது என்னால் தாங்க முடியவில்லை. கைகளில் உணவுத் தட்டுகளுடனும், உடல் முழுதும் வடிந்த குருதியுடனும் ஆயிரமாயிரம் புழுக்களைக் கண்டேன்.. ‘ஐயோ இது என்ன நீதி’ என்று தலையில் கை வைத்துக் குளறியபடி நடக்கத் தொடங்கினேன்……..

யாராவது என்னைத்தேடலாம், ‘நாடுகடந்த அரசுபற்றி’ பேச என் நண்பர்கள் என்னையும் அழைக்கலாம்.என் பிரியமான வாசகர்களே உங்களிடமிருந்தும்
இப்போது பிரிந்து செல்கிறேன். எனக்கு வேண்டியது தனிமை. பிணங்களையும்
புணரும் மனநிலைகொண்ட மனிதர்களை இந்த நூற்றாண்டு கொண்டிருக்கிறதென்றால். இப்போதிருக்கும் நாம் யாருடைய சாயலாய் இருக்கிறோம் என்று நான் கொங்சம் யோசிக்கவேண்டும்/


முடிந்தது

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)