பிரண்டையாறு சிறுகதைப் புத்தகம் பற்றி மீராபாரதி

பிரண்டையாறு: ஆழ்மனதில் ஓடுகின்ற … எண்ணங்கள் …
ஒரு முறை திருகோணமலை துறை முகத்திலிருந்து மூதூருக்கு கடல் கடந்து சென்று கொண்டிருந்தோம். இக் கடல் பாதையின் குறுக்காகதான் மாகாவலி கங்கை வந்து கடலில் சேருகின்றது என நண்பர்கள் குறிப்பிட்டார்கள். அந்த கங்கையானது, இக் கடலின் அடியில், மிகவேகமாக பாய்ந்து செல்கின்றது. கடலின் அடியில் ஒடும் ஆறு என அதை அன்று புரிந்து கொண்டேன். இது நடந்து 22 வருடங்களின் பின்பு, இவ்வாறான பல ஆறுகள் கடலில் அடியில் ஓடுகின்ற எனவும், அதற்கு ஒரு பெயர் உண்டு எனவும் நண்பர் மெலிஞ்சி முத்தனின் விளக்கத்தினுடாக அறிந்து கொண்டேன். அவரின் சிறுகதை தொகுதியின் தலைப்பான “பிரண்டையாறு”தான் அதற்கான பெயர். பிரண்டையாறு தொகுதியிலுள்ள சிறுகதைகள், கடலின் அடியில் ஓடும் ஆறுபோல, நம் ஆழ் மனதிற்குள் ஓடும் எண்ணங்கள் என்றால் மிகையல்ல.
பிரண்டையாறு தொகுதியிலுள்ள சிறுகதைகளுக்குள் சின்னஞ் சிறு கதைகளும் உள்ளன. அதேவேளை, இதில் உள்ள எல்லாக் கதைகளுக்குள்ளும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற… தன்னைச் சுற்றி நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருக்கின்ற… அதனால் பாதிக்கப்பட்ட உணர்வுகளைக் கொண்ட ஒரு மனிதர், மாணங்கி, மற்றும் ஆசிரியர் என மூவர் தொடர்ச்சியாக பயணிக்கின்றனர் என்பதையும் அவதானிக்கலாம். இதனால் இதனை சிறுகதைகளைக் கொண்ட ஒரு குறு நாவல் (?) என்று கூட கூறலாம். ஆகவே இவை வெறுமனே சிறுகதைகளின் தொகுப்பு அல்ல
இச் சிறு கதைகளின் தொகுப்பானது, மனிதர்களின் ஆழ் மனங்களில் ஒடுகின்ற எண்ணங்களின் பதிவுகள் என்பதை ஆசிரியரும் பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றார் . உதாரணமாக இரு இடங்களில், “என் மனப் பதிவுகள் போல ஓடிக் கொண்ருக்கின்ற நதி” என்றும் “எண்ணங்களின் திரட்சி” எனவும் உறுதி செய்கின்றார் (25, 58). இவ்வாறான எண்ணங்கள், தமக்குள் முரண்பட்டும், தெளிவற்றும், தொடர்பற்றும் ஒருவரின் ஆழ்மனதில் ஓடிக் கொண்டிருப்பவை. இவ்வாறான எண்ணங்களை, ஒரு முகப்படுத்தி, ஒழுங்குபடுத்தி சிறுகதைகளாக படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நம் ஆழ் மனதில் இவ்வாறு ஓடுகின்ற எண்ணங்களைப் பற்றி கவனியாது, அறியாது இருக்கும் எங்களுக்கு இவரது கதைகளுடன் அடையாளப்படுத்துவது என்பது கஸ்டமானதுதான். ஆனால் அவ்வாறு கவனிக்க ஆரம்பிப்போமாயின், நமது சமூகம், தேசம், அரசியல் என்பன பற்றி மட்டுமல்ல  நம்மைப் பற்றியும்,  பல உண்மைகளையும் மற்றும் மனிதர்களின் ஆழமான உணர்வுகளையும் நாம் அறிந்து கொள்ளலாம் என்றால் மிகையல்ல.
பொதுவாக மனிதர்கள் மூளையால் அல்லது மனதால்தான் சிந்திப்பதாக அறிகின்றோம். அல்லது ஜப்பானியர்களைப் போல பொக்குள் பகுதியில்தான் இருந்துதான் சிந்தனை பிறக்கின்றது என நம்பப்படுகின்றது. இன்னும் சிலர், ஏகிப்தியர்கள், இதயத்தால் சிந்திப்பதாகவும் அறிய முடிகிறது. இதைப் போல, இன்னும் வித்தியாசமாக, தான் நடக்கும் பொழுது,  “கால்களினுடாகவும் சிந்திக்கின்றார்” (51) இவ(ர்)ரது பிரதான பாத்திரம். இது சிந்தனை அல்லது எண்ணங்கள் அல்லது ஞாபகங்கள் என்பது நம் உடலின் ஒவ்வொரு செல்களிலும் இருக்கின்றது என்ற உளவியல் முன்மொழிவொன்றுடன் ஒன்றுபடுகின்றது. இதனால்தான் பிரக்ஞைபூர்வமான ஆழமான புனைவுகள் என்பது பிரபஞ்ச  உண்மைக்கு அருகாமையில் பயணிக்கின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது.  இவ்வாறான பயணமானது இவரை இன்னுமொரு தளத்திற்கு கொண்டு செல்கின்றதோ என சிந்திக்க வைக்கின்றது.
மெலிஞ்சி தனது ஆழ் மன எண்ணங்களை கவனித்து, அதனைப் படைப்பாக்குவதன் மூலமாக, தனது ஆன்மாவைத் தேடும் முயற்சியில் இருக்கின்றாரோ என்றே உணர்கின்றேன். ஏனெனில் இவ்வாறன படைப்பினுடான இவர், தனது “மனசைக் கடந்து” செல்ல முற்சிக்கின்ற தருணங்களும் வருகின்றன. இது மட்டுமல்ல, தனது எண்ணங்களுக்கு இடையிலான வெளியின் (“ஷணங்கள்”) (7) அர்த்தங்களையும் தேடிப் பயணிக்கின்றார். இது படைப்பிலக்கியத்தினுடாக “தன்னாத்மாவை தேடுகின்ற” அல்லது பிரபஞ்ச உண்மையை உணர்கின்ற இன்னுமொரு வழியோ எனவும் உணர்கின்றேன். இவ்வாறான ஒரு முயற்சியில், மு.தளையசிங்கமும் எஸ்.பொன்னுத்துரையும் தமது படைப்பிலக்கியத்தினுடாக ஈடுபட்டதாக அறிகின்றேன். இது தொடர்பாக இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுத முயற்சிக்கின்றேன்.
மெலிஞ்சியின் இவ்வாறன ஒரு பயணிப்பின் உச்சமாகத்தான் இவரது “இல்ஹாம்” (17) என்ற சிறு கதை இருப்பதாக உணர்கின்றேன். இக் கதை தொடர்பாக தேவகாந்தன் வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது, யாரோ ஒரு பெயர் பெற்ற சிறந்த ஒரு எழுத்தாளரின் கதையைப் பற்றிதான் அவர் கூறுகின்றார் என முதலில் நினைத்தேன். ஆனால் அது மெலிஞ்சியின் கதை என அறிந்தபோது அவர் மீதான அவரது படைப்பின் மீதான மதிப்பு மேலும் அதிகமானது. இக் கதையில் தனது ஆன்மாவிற்கும் மற்றவரது ஆன்மாவிற்குமான இடைவெளியேத் தேடுகின்றார். தேடுவது மட்டுமல்ல அதனுடாக தனது அரசியலையும் அழகாகவும் ஆணித்தரமாகவும் முன்வைக்கின்றார்.
இச் சிறுகதைத் தொகுதிக்கான எனது விமர்சனங்கள் எனின், இக் கதைகளின் இடையிடையே ஆசிரியர் வந்து பல இடங்களில் இடையூடு செய்வதைக் (16, 58, 59, 64) குறிப்பிடலாம். இது வாசகர்களுக்கு அல்லது ஆக்க் குறைந்த்து எனக்கு ஒரு தடைகல்லாகவே இருந்தது.
மெலிஞ்சியின் பிரண்டையாறு மட்டுமல்ல வேருலகும் நம் ஆழ் மனங்கிளில் ஓடுகின்ற நமது எண்ணங்கள் தான் என்றால் மிகையல்ல…. இவை இலங்கையின் தமிழ் தேசத்தையும் அங்கு வாழ்கின்ற, வாழ்ந்த மனிதர்களையும், அவர்களின் போராட்டத்தையும், அதன் அரசியலையும், இதன் விளைவாக உருவான புலம் பெயர்ந்த மனிதர்களின் அவலங்களையும் பல பாத்திரங்களினுடாக படைத்திருக்கின்றது. ஆனால் அவை நேரடியாகவோ வெளிப்படையாக கூறப்படவில்லை. மாறாக சமூகத்தில் சாதாரண மனிதர்களாக வலம் வரும் பாத்திரங்களின் வாழ்வினுடாக, அவர்களது உணர்வுகளினுடாக, உணர்ச்சிகளினுடாக, எண்ணங்களினுடாக வெளிப்படுகின்றது.
மெலிஞ்சியின் இவ்வாறான சிறுகதைகளின் தொகுதியான ஒரு குறுநாவல் (?), சயந்தனின் குறுநாவலான ஆறாவடு போல் ஏன் பேசப்படவில்லை? என்ற கேள்விக்கான எனது பதிலை, ஆறாவடு குறுநாவலுக்கான விமர்சனக் கூட்டத்தில் மேலோட்டமாக முன்வைத்திருந்தேன்.  அதனை  இக் கட்டுரையின் இரண்டாவது பகுதியில் விளக்கமாக எழுதுகின்றேன்.
மீராபாரதி

Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)