இப்னுபதூதாவும், இலக்கியக் கூட்டமும். ( முன்னுரை)

டொரன்ரோவில் தேவ அபிரா எழுதிய ‘இருள் தின்ற ஈழம்’ புத்தக வெளியீடுநிகழ்ந்தபோது. நான் அதில் பேசுவதற்காக கேட்கப்பட்டிருந்தேன்.புத்தகத்தை வாசித்தபோதுசில ஆண்டுகளின் முன்னர் என்னை ஈர்த்திருந்த தேவ அபிராவின் கவிதைகள் இம்முறை வாசித்தபோது எனக்கு எவ்வகைக் கலை அனுபவத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு எழுத்தாளர் மட்டுமல்ல, காலமும், சூழலும்,வாசகரும் கூடத்தான் காரணம். ஆனால் அக்கவிதைகளை வாசித்தபோது அவை நவீன கவிதைகளாய் இருந்தபோதும் மரபை அறுத்துவிடாதவையாய் இருந்தன. ‘தமிழ்க்கவிதையின்’ அடையாளங்களாகவே அவற்றைப் பார்த்தேன். ஆனாலும் எனக்கு புதுமை வேண்டியிருக்கிறதே.
தேவஅபிரா நிதானமான ஒருகவிஞர்,சமூக அக்கறை அவருடைய கவிதைகளில் இருக்கின்றது. ஆனாலும் ஈழத்து நவீன கவிதையின் போக்கிலிருந்து விலகாதவை அவை.நவீன கவிதைப் போக்குக்குள் காத்திரமானவை என்றுகூடச் சொல்லலாம். சிங்களதீபத்தில் சிறுபான்மை இனங்களுக்கான ஜனநாயகம்,போரின் விலை,தேர்தல்,சிங்களதேசம்,எலும்புக்கூடும் இரண்டுகனவுகளும்,விடுதலை, போரின் விலை, இவை புத்தகத்தில் வந்த கவிதைகள் சிலவற்றின் தலைப்புகள்.
கவிதைக்கான மொழி நம்மிடம் நமது நம் கிராமத்தின் பேச்சுவளக்கு மொழிபோல ஆகிவிட்டது.இரவுப்பாடல்களையும்,இலையுதிர்காலத்து மொட்டை மரங்களையும்,எத்தனை கவிதைகளில்தான் சொல்லுவோம்.இதே மனநிலை என்னிடம் ஏற்பட்டு என் கவிதைகளிலேயே எனக்கு திருப்தியீனம் ஏற்பட்டபோதுதான் நான் கவிதை எழுதுவதையே குறைத்துக்கொண்டேன்.

இப்போதெல்லாம் ‘கவிதைக்குள் வரும் பிணங்கள்’ எனக்கு எந்தச் சலனத்தையும் உண்டுபண்ணவில்லை. இவ்வாறான கவிதைகள் இன்று எந்தத் தாக்கங்களையும் உண்டுபண்ணவில்லை என்றாலும் இவற்றுக்குரிய மரியாதையுடன் இவற்றை அணுகவேண்டியே இருக்கின்றது. இவற்றை எழுதுகின்ற கவிஞர் மொழிவழி செய்துவந்தடைந்திருக்கும் முயல்வுகள் மதிக்கப்படவேண்டியவையே. இவ்வாறான மன நிலையில் சக கவிஞனை நேசத்தோடு வாழ்த்துவதே எனக்கு உவப்பாய் இருக்கிறது.

ஈழத்துக் கவிதைகள் பெரும்பாலும் சொற்களிலேயே தங்கி நிற்பதாய் உணரும் நான் குறிப்பிடத்தக்க சொற்கூட்டமொன்று நம் கவிதைப்போக்கை மய்யப்படுத்தி அதன் பயணிக்கும் குணத்தை இல்லாதாக்கியிருக்கின்றதாகவும் கருதுகின்றேன்.இன்று கவிதைக்கான புதிய களத்தேடல்கள் இலங்கையில் நடக்கத் தொடங்கிவிட்டன. சொற்களைத் தெரிவுசெய்யும் முன்னரே வடிவத்தைத் தீர்மானித்துவிட்டு நகர்த்தும் கவியகங்களைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கிறது.அது பெரியஅளவிலான புதுமைகளை நிகழ்த்தவில்லை என்றாலும் ஒரு தொடக்கம் என்று உணரத்தக்கதாகவே இருக்கிறது.

கவிதைக்கும் எனக்கும் இருக்கும் அந்தரங்க உறவை எப்படி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பதில் எனக்கு பிரச்சினை இருக்கின்றது.அதுமட்டுமல்லாமல் நான் ஒரு படைப்பாளி,எழுதுவதில் இருக்கும் ஆர்வம் அரங்கமொன்றில் விமர்சன உரை ஆற்றுவதில் இல்லை.
இந்த மனநிலையோடு இந்தக்கவிதைகளை விமர்சனம் செய்வதும்,அதுவும் ஒரேமாதிரியான பாணியில் செய்வதும் எனக்கு ஆர்வமுடையதாய் இருக்கவில்லை. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான மீராபாரதியிடமும்,தேவ அபிராவிடமும் என் மனநிலையை பகிர்ந்துகொண்டேன். ஒரு படைப்பாளியாய் நேசத்தோடு என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் சொன்னேன்.
இலக்கியம் சமூக விரிவுக்கான பயணம் என்பதை வலியுறுத்த சிறந்த பயணியாகிய இப்னு பதூதாவை அனுப்பிவைத்தேன். அவர் அந்த நிகழ்வில் ஒர் ‘அரங்கக் கதையின்’ பாத்திரமாய் மாறி நின்றார். அவர் சொன்னதும்,சொல்லாததுமான அரங்கக்கதை’யின் விரிந்த எழுத்துவடிவமே இது.
..........................................................................................................................................................................................
இப்னு பதூதாவும் இலக்கியக் கூட்டமும் (கதை)

மொழியும்,மனமும் பினைய பேசமுனைகிறேன். காலமற்றதும்,கதைகளுக்கு அப்பாலானதுமானதொரு மெய் வரலாற்றை பார்த்துக்கொண்டிருக்கிறது. என்ற உணர்வுத்தனத்தோடு மனந்துருவித் தொன்மம் தேடுகிறேன்.நான் பயணி.இலக்கியத்தை மானுடச் சமூகத்தின் கூட்டுஅகவிரிவுக்கான கருவியாக எடுத்தியக்க முனைபவன். என் பெயர் ‘இப்னு பதூதா’ (1304-1369)  The Greatest Arab Traveller) 

மொரோக்கோ  நாட்டின் ஜிப்ரால்டர் ஜலசந்தியை ஒட்டியதன்ஜித் ‘ என்ற கடற்கரை நகரத்திலிருந்து 75000 மைல்கள்(120,000 k.m) சுற்றிவந்தவன், மார்க்கோ போலோவிற்கு ஐம்பதாண்டுகளுக்கு முந்தியவன். இப்போது இங்கே மீண்டும் வந்திருக்கிறேன்.

ஒரு முறைக்குமேல்  ஒரே வழியில் செல்வதில்லை என்ற மனப்போக்குக்கொண்டவன் ஒரேமாதிரிக் கவிதை எழுதி,ஒரேமாதிரி விமர்சனங்கள் செய்யும் உங்கள் கூட்டங்களுக்கு வந்துபோகிறேன்.
நான் ஒரு எழுத்தாளனும்கூட ‘The Journey’ என்ற தலைப்பில் நூல் ஒன்றையும் எழுதியுள்ளேன். வாகன வசதி இல்லாத காலத்திலேயே  ஏறக்குறைய 44 நாடுகளுக்குமேல் சுற்றி பல்வேறு மக்கள்அரசர்கள்சூஃபிக்கள்முக்கிய பிரமுகர்கள் என இப்படி இரண்டாயிரத்துக்கும் மேலானவர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். இப்போது என் இலக்கியம் உங்களோடு தொடர்புகொள்ள வைத்திருக்கிறது.

ஆரியர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியாமூலம் இலங்கைக்கும் வந்திருக்கிறேன்.அப்போது வடபகுதியை ஆண்ட ஆரியமன்னன் முத்துக்கள்பதித்த கிண்ணத்தில் பானம் பருகிக்கொண்டிருந்தான்.வடபகுதி செழிப்புமிக்கதாய் இருந்தது.
அப்போது வந்த நான் உங்கள் நாட்டின் முத்துக்களையும்,ஆனைத்தந்தங்களையும்,சங்குகளையும் பார்த்து பிரம்மித்துவிட்டுச் சென்றேன். கவிதையும் உங்கள் சொத்துத்தானே அதனாலேயே இங்கு இப்போது வந்தேன்.

நீங்கள் இலக்கியத்தை உங்கள்கொல்லைகளிலிருந்து போடப்பட்ட ஒற்றையடிப் பாதையாக உணர்ந்து வைத்திருப்பதை சுட்டவது என் பொறுப்பு என்று உணர்கிறேன்.

உங்கள் இலக்கியக் கூட்டங்களுக்கு ஒரு ஒழுங்கு இருக்கிறது. அந்த ஒழுங்கின் பின்னால் ‘ஊளைச்சதைகள்’ ஆகிவிட்ட உங்கள் கோட்பாட்டுப் பார்வைகள் இருப்பதாய் நான் உணர்கிறேன். உங்கள் இலக்கிய மன்னர்கள் வெட்டிய கருத்தியற் குளங்களுக்குள் நீங்கள் இன்னமும் ‘உயிர்ப்புள்ள மீன்களைத் தேடுகிறீர்கள்,அல்லது மீன்கள் உயிர்ப்புடன் இருப்பதாய் பிரச்சாரம் செய்கிறீர்கள். நீங்கள் போடும் எல்லையை  யாரும் மீறிவிடக் கூடாது, உங்கள் அறிவுக்கு எட்டாத எவற்றையும் யாரும் பேசிவிடக் கூடாது. நீங்கள் கண்டுவைத்திருந்த இலக்கிய ஆய்வுக்கருவிகள் எல்லாம் மொட்டையாகிப் போய் விட்டபின்னும் நீங்கள் அதிகாரம் செலுத்தும் குழு மன நிலையில் உங்கள் குழுவின் பாணியில் பேசும்படி மறைமுகமான எச்சரிக்கைகளை விடுகிறீர்கள், உங்களை திருப்திப் படுத்துவதற்காக நான் வரவில்லை. என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
                                                                               நீங்கள் பிரச்சினைகள்பற்றி பேசுவீர்கள். ஆனால் உங்கள் பேச்சு வடிவத்தைக்கூட மாற்றமாட்டீர்கள்.ஏனெனில் நீங்கள் கண்டுவைத்திருக்கும் பேச்சுமுறை உங்கள் பலருக்கு வசதியாக அமைந்திருக்கிறது. இலக்கிய ஏஜண்டுகளுக்கும்,புகழ்ப் பண்டமாற்றுக்காரர்களுக்கும் அதுவே வசதியான வடிவம். முதலில் வெளியே வாருங்கள்.

நான் இங்கு சுமந்துவந்திருக்கும் என்னுடைய சாம்பல் நிறப் பை பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். நீங்கள் சாம்பல் இலக்கியம்பற்றி கேள்விப்படுவதற்கு முன்னரே இந்தப் பை இங்கு இருக்கிறது என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இருள் ஈழத்தைத் தின்றபோது வடிந்த குருதியில் இந்தப்பை சிவப்பு நிறமாய் இருந்தது. சிவப்பு நிறம் எவரெவர்க்கெல்லாம் உவப்பானதோ அவர்களெல்லாம் இந்தப் பையை எடுத்துப் பாவித்தார்கள்,இன்று இது சாம்பல் நிறமாய் தெரிகிறது.

வெள்ளை,கறுப்பு என்ற இரண்டு துருவ நிலைகளுக்குள் நிற்பவர்களிலும் விட  துருவ நிலையில் இல்லாதவர்களிடம் ஒரு புதிய இலக்கிய முயல்வு தொடங்கியிருப்பதை அவதானிக்கிறேன், நீங்கள் காணவில்லையா?

இதோ பாருங்கள்.
இந்தப் பைக்குள் என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? உங்களால் சொல்ல முடிகிறதா...../
நான் சொல்கிறேன் இந்தப் பைக்குள் நான் ஒரு யானையைக் கொண்டுவந்திருக்கின்றேன். ம்....யானை/ நீங்கள் நம்பமாட்டீர்கள். நானும் உங்களை வற்புறுத்தவில்லை. உங்களுக்கு எதையெடுத்தாலும் நான் ஆதாரங்களையும்,வரைவிலக்கணங்களையும் சொல்லவேண்டியிருக்கிறது.

நான் இந்த யானையைக் காண்கிறேன். என் கற்பனையும்,பிரமையும்,கனவும்,உணர்வும் உங்களுக்குத் தெரிகிறதா? சமூகத்தின் கூட்டு அக விரிவுக்கு இவை அத்தனையும் தேவையானவை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.
நான் இங்கே பேசுவது குறியீட்டுத் தன்மை மிக்கதாய் இருக்கின்றது.நீங்கள் வந்திருப்பது இலக்கியக் கூட்டம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இதில் இப்படிப் பேசுதல்தான் எனக்கு உவப்பாய் தெரிகிறது.

நான் யானைபற்றிப் பேசும்போது உங்களுக்கு பல யானைகள் நினைவுக்கு வரலாம். பாரதிக்கு அடித்த யானை,அல்லது யூ.என்.பி கட்சியின் யானை,அல்லது தீப்பெட்டி யானையும்,ஜீ.ஜீ பொன்னம்பலமும் கூட நினைவுக்கு வரலாம். இன்னும் சிலருக்கு குணராசா எழுதிய ‘யானை’ கதை,அல்லது வைக்கம் முகம்மது பசீர் எழுதிய ‘என் உப்பப்பாவுக்கொரு யானை இருந்தது’ கதை நினைவுக்கு வரலாம். ஆனால் எனக்கு ஆனையிறவே பெரும்பாலும் நினைவுக்கு வரும்.

உங்களுக்குத்தெரியுமா? வடபகுதியில் ஆனையிறவுக்கு அருகில் ‘பர்பர்பிட்டி’ என்று ஓர் இடம் இருந்ததும்,என் இனத்தவரான பெர்பர்(beber) இன மக்கள் வாழ்ந்துவந்தார்கள் என்பதும்.?பின்னர் உசனிலும்,துரத்தப்பட்டு சாவகச்சேரியிலும்,நல்லூர் நாவாந்துறைப் பகுதிகளிலும் வாழ்ந்தார்கள் என்பதும்... உங்களுக்கு தெரியுமா?

யானை என்பது நம் எல்லோருக்குமே வேறு வேறு நினைவுகளை தோற்றுவிக்கக்கூடியதாக இருக்கிறதல்லவா. அந்த பன்முகத் தன்மையை ஒவ்வொரு படைப்பாளியும் உணர்ந்து வைத்திருக்கவேண்டும். விஞ்ஞானத்தோடும்,மெய்ஞானத்தோடும்,ஏனைய துறைகளோடும் கலவிகொள்ளும் இலக்கியப் போக்கை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
இதை விடுத்து நாம் சக்கையைச் சுற்றும் செக்குமாடுகள் ஆகவேண்டியதில்லையே  நான் பயணி என்னால் இப்படித்தான் பேச முடிகிறது. என்னை விமர்சிக்கவும்,என் தவறுகளைச் சுட்டிக்காட்டவும் உங்களுக்கு உரிமை இருக்கின்றது. என் அறிவை இந்தப் பூமியின் மனிதச் சமூகத்திலிருந்தே பெற்றுக்கொண்டேன் என்பதால் எனக்கு தலைக்கனம் வரப்போவதில்லை.

என் இலக்கியத் தோழர்களே ஒரு பயணிக்கான மன நிலையைப் பெற்றுக்கொள்ளுங்கள் நம் இலக்கியத்தைத் தேக்கமுறச்செய்யும் கட்டுக்களை உடையுங்கள்.

24 ஆண்டுகாலம்  சொந்த நாட்டுக்குத் திரும்பிச்செல்லாத பயண ஆர்வம் கொண்ட நான் உங்களைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சி அடைகிறேன். என் பையையும் தூக்கிக்கொண்டு நான் புறப்படுகின்றேன்.
வணக்கம்.

 பி.கு. = இப்னுபதூதா சென்று இரண்டு நாட்களின் பின்னும் குசுகுசுப்புக்கள் இருந்தன.

(நன்றி- இலங்கையில் தமிழர்- ஒரு முழுமையான வரலாறு, விக்கிபீடியா.)



Comments

Popular posts from this blog

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

புலம் பெயரும் சாமங்களின் கதை (கிளாலி-1993-1994)